tnaபலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதிகளை விடுவிப்பது குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (21) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், சரவணபவன், தர்மலிங்கம சித்தார்த்தன் உட்பட இராணுவம், கடற்படை, விமானப்படையினர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட எம். ஏ. சுமந்திரன் கூறியதாவது,

பலாலி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பது பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இன்றைய கூட்டத்தில் அந்த காணிகள் விடுவிப்பது தொடர்பான தீர்மானங்கள் எட்டப்படவில்லை. விமான நிலையத்தின் விஸ்தரிப்பிற்கு மேலதிக காணிகள் தேவையா இல்லையா? என்பது தொடர்பான தரவுகள் கிடைத்துள்ளன.

அந்த தகவல்களையும் வைத்துக்கொண்டு சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதா அல்லது பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதா என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும். சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதாக இருந்தால், பொது மக்களுடனும் கலந்துரையாடி தனியார் காணிகள் சுவீகரிப்பதற்கான நிலமைகள் இருப்பதன் காரணமாக மாற்றுவழிகளை எடுக்கலாமா என்ற முடிவுகளை பின்னர் எடுக்க வேண்டும்.

காணிகள் குறித்த விபரத்தினை பிரதேச செயலாளர்கள் ஒரு வாரத்தில் அரசாங்க அதிபரிடம் கையளிப்பார்கள். பிரதேச செயலாளர்கள் தரவுகளை மாவட்ட செயலாரிடம் கையளித்த பின்னர் இராணுவத்தினருடன் கலந்துரையாடி, அதில் தடைகள் ஏதும் இருந்தால், அவற்றினை நீக்கி, பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்.

2009 போர் முடிவடைந்த பின்னர் 27 ஆயிரம் ஏக்கர் காணி படையினர் வசம் இருந்ததாகவும், தற்போது 4 ஆயிரத்து 700 ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் சுட்டிக் காட்டியுள்ளனர். வலிவடக்கு பிரதேசத்தினைச் சூழ்ந்த பகுதியில் 12 ஆயிரம் ஏக்கர் ஆரம்பத்தில் இருந்துள்ளது.

மீள்குடியேற்றம் அல்லது சுமூக நிலை வருகின்ற போது, மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று வாழ வேண்டுமென்பது எமது அடிப்படை கோரிக்கை. நல்லாட்சிஅரசாங்கத்துடன் இணங்கியுள்ள விடயமும் இது தான். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜனாதிபதி தனியார் காணிகள் விடுவிக்கப்படுமென்று வாக்குறுதியளித்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பாதுகாப்பு படையினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.

மாவட்ட ரீதியாக நடைபெறும் கலந்துரையாடல்களின் பின்னர், அரசியல் தலைவர்களுடனும், அமைச்சர்களுடனும் நடைபெறவுள்ள உயர்மட்ட கலந்துரையாடல் தான், மிக முக்கியமாக இருக்கும். அவை தான் காணி விடுவிப்பு குறித்து உறுதியான முடிவுகளை எடுப்பதற்கான கலந்துரையாடலாக இருக்கும் என்றார்.