GT30 வருட ஆயுத போராட்டம் மற்றும் அகிம்சை போராட்டத்தின் மூலம் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.

வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலய திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,இந்த நாட்டிலே எமது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாற்றப்பட்டு எழுச்சி பெற்ற காலத்தில், இளைஞர் சேவை மன்றத்தை தமிழ் மக்கள் நம்ப முடியாத ஒரு நிலை இருந்தது. அதே போல் சர்வோதயத்தை நம்ப முடியாத காலகட்டம் இருந்தது.

அதை ஏன் நான் சொல்கின்றேன் என்றால், 1986 அல்லது 1987இல் நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த மகேந்திர நாதன் என்பவர் கொழும்பிலே நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்ற காரணத்தினால் ஒரு இயக்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதற்கு காரணம் அந்த நேரத்தில் இளைஞர் சேவை மன்றத்தை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இன்று இந்த மண்னைச் சேர்ந்தவர்கள் இளைஞர்கள் சேவை மன்றத்திற்குள் உள்வாங்கப்படுகின்ற போது நாங்கள் ஒட்டு மொத்தமாக சிங்களம், தமிழ், முஸ்லிம் என்கின்ற நிலைமை மாறி இளைஞர்கள் சேவைகள் மன்றம் எதிர் காலத்தில் சிறப்பாக செயற்படும் என்பது எனது நம்பிக்கை.

அண்மையில் இளைஞர்களின் எழுச்சி பல இடங்களில் நிலைநாட்டப்பட்டிருந்தாலும் கூட, இந்தியாவிலே நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வை ஒரு சர்வதேச தரத்திற்கு, யாருமே எதிர்பாராத விதத்தில் இந்திய மத்திய அரசை அடிபணிய வைத்தவர்கள் இந்த தமிழ் இளைஞர்கள். அந்த சக்தி உங்களிடம் இருக்கின்றது.

அந்த சக்தியை நீங்கள் சரியாக பயன்படுத்துங்கள். இந்த இளைஞர்கள் இப்படியான பயிற்சிகளில் கலந்து கொள்வதை பார்ப்பதற்கு சந்தோசமாக உள்ளது.

உங்களுடைய காலத்தை வீணாக்காமல் உங்களுக்கு தெரிந்த அல்லது கற்றுக்கொள்கின்ற முயற்சியை எடுத்துக்கொண்டது பாராட்டத்தக்க விடயம் என வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.