தந்தை செல்வாவின் 40ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் தந்தை செல்வநாயகத்தின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தினர்.
தந்தை செல்வா அறங்காவல் குழுவின் தலைவர் சு.ஜெபநேசன் தலைமையில் தந்தை செல்வாவின் நினைவுப் பேருரை நிகழ்வு நடைபெற்றதோடு அரசியலமைப்பின் நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண, ‘அதிகாரப் பகிர்விற்கான கோரிக்கை’ எனும் தொனிப் பொருளில் நினைவுப் பேருரை ஆற்றினார்.
நிகழ்வில் தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.