அம்பாறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது. குறித்த மே தின கூட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மருதடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான மே தின ஊர்வலம் அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டம் ஊடாக சென்று மே தின கூட்டம் நடைபெறும் மைதானத்தை அடைந்தது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும், ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி ஏற்பாடு செய்யப்பட்ட மே தின நிகழ்வு இன்றுகாலை 9மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டது. இம் மே தின ஊர்வலம் டிப்போச் சந்தியை சென்றடைந்தது. அங்கு பொதுக் கூட்டமும் இடம்பெற்றது. இம் மே தின நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், கூட்டுறவு தொழிலாளர்களின் மே தினப் பேரணி முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. குறித்த பேரணியில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த பேரணியைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு கல்லூரி கலை அரங்கில் மே தினத்திற்கான சிறப்பு கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன்வ, டக்குமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் குருகுலராசா மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கந்தையா சிவநேசன், அனந்தி சசிதரன், து.ரவிகரன், புவனேஸ்வரன், இந்திரராசா, தியாகராசா, கஜதீபன், சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.