sdfdகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் சிபாரில்; ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்துள்ளார். இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது,

இந்த நியமனம் 5வருட காலத்துக்குரியதாகும். இந்தப் பல்கலைக்கழகத்தில் வேந்தராகப் பதவி வகித்த பேராசிரியை யோகா இராசநாயகத்தின் பதவிக்காலம், 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்ததை அடுத்து, அப்பதவிக்கான வெற்றிடம் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அப்பல்கலைக்கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவும் புதிய வேந்தர் நியமனம் நடைபெறும்வரை காலவரையறையின்றி பிற்போடப்பட்டு வந்தது. பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும்போது, சம்பிரதாயப்படி அதன் வேந்தர் பிரசன்னமாகியிருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், புதிய வேந்தர் தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளதால், 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா புதிய வேந்தரின் பிரசன்னத்துடன் நடைபெறுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்படும் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.