kilinochciமுகமாலையில் பொலிஸார் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை  பிரதேசம் மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய  பெருமளவு இராணுவத்தினர் மற்றும்  பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை 12.30 மணிக்கு ஏ9 பிரதான  முகமாலை கச்சார்வெளி பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து பொலிஸார் ஏ9 பிரதான வீதியில் கடமையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது கச்சார்வெளி கிராம பக்கமாக எழுந்த சந்தேகத்திற்கு இடமான சத்தம் கேட்டபோது  போக்குவரத்து பொலிஸார்  டோர்ச் லைட் ஒளி  மூலம் அவதானித்த போது இனந்ததெரியாத நபர் ஒருவர் ரி56 ரக துப்பாக்கியினால் நான்கு தடவைகள் பொலிஸார் மீது சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளளனர். இருந்த போதும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. துப்பாக்கி தோட்டாக்கள் அருகில் காணப்பட்ட புகையிரத சமிஞ்கை கட்டுப்பாட்டு பெட்டிகளை தாக்கியிருக்கின்றன.

இதனையடுத்து இன்று அதிகாலை பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலம் கச்சார்வெளி உள்ளிட்ட பிரதேசங்களில் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்புகள் செய்யபட்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றன.

பெருமளவு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்