Gajendrakumar-Ponnambalamதமிழ் மக்களின் தேசிய கொள்கையுடன் செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசு கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை தடுக்க தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய கொள்கைக்காக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். அவரின் கொள்கைகளை அகற்றுவதற்கு தமிழரசு கட்சி ஈ.பி.டி.பி மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறது.

திருடர்களை காப்பாற்றுவதற்கு தமிழரசு கட்சி செயற்பட்டு கொண்டிருக்கின்றது. திருடர்களின் குகையாக தமிழரசுக்கட்சி மாறியுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கொள்கைப்பற்று பாதையை தோற்கடிப்பதற்காக ஈ.பி.டி.பி மற்றும் அரசாங்கம் மற்றும் தமிழ் இனத்தினைக் காட்டிக் கொடுத்த தரப்பினருடன் இணைந்து கொண்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் துணை போகவில்லை. முதலமைச்சருக்கு எதிரான இந்த சதிக்குப் பின்னால், அரசாங்கம் துணை நிற்கின்றது.

03 வாரங்களுக்கு முன்னர் பீல்ட் மாஸ்ரர் சரத் பொன்சேகா வடமாகாண முதலமைச்சரின் பதவிக்காலம் மிக விரைவில் நிறைவடையுமென தெரிவித்திருந்தார் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

ஒற்றையாட்சிக்குள் கொண்டு வருதவற்கு திட்டமிட்டு செயற்படும் அரசாங்கத்துடன் இணைந்து தமிழரசுக் கட்சி செயற்படுகின்றதென்பதனை எமது மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தந்தை செல்வாவின் கோரிக்கைகளை அழிப்பதற்கு தமிழரசுக்கட்சி செயற்பட்டு கொண்டிருக்கின்றது. மாகாண சபையில் இடம்பெற்ற அனைத்து விடயங்களும் வெறுமனவே ஊழல் சம்பந்தப்பட்ட விடயங்கள் அல்ல.

இவை அனைத்தும் தமிழ் மக்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விடயம் என்பதனை எமது மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழ் தேசத்தின் வாழ்வா? சாவா என்ற இந்த நிலையில் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும். வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான சதியை முறியடிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்படுமென்பதுடன், தமிழ் மக்கள் பேரவையின் முடிவுகளுக்கு அப்பால், தமிழ் மக்கள் இந்த சதியினை முறியடிக்க அனைவரும் அணிதிரள வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.