sfddfdகிளிநொச்சி இரணைதீவு மக்களால் பேரணியாக வந்து முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு அருகில் உள்ள ஏ32 மன்னார் வீதியை மறித்து தமக்கான தீர்வினை கோரி நடத்தப்பட்ட வீதிமறிப்புப் போராட்டம் பூநகரி பிரதேச செயலரின் உறுதி மொழிக்கமைய இன்றுகாலை முடிவிற்கு வந்தது.

கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த இடத்திற்குச் செல்வதற்கான அனுமதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை கடந்த ஐந்தாம் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்திருந்தனர். இப் போராட்டமானது இன்று தீர்வுகள் எவையும் இன்றி 54வது நாளை எட்டிய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமார் எழுநூறுற்கும் மேற்பட்ட மக்கள் இன்றுகாலை சுலோகங்களைத் தாங்கியவாறு பேரணியாக வந்து முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு அருகில் உள்ள ஏ32 மன்னார் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பூநகரி பிரதேச செயலர் இரணைதீவு சம்பந்தமாக மேலிடங்களுக்கு அரசாங்க அதிபர் ஊடாக பலமுறை அறிவித்து உள்ளோம். எதிர்வரும் புதன்கிழமை எனக்கும் அரசாங்க அதிபர் மற்றும் கடற்படையினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற உள்ளது. அக் கலந்துரையாடலுக்காக இரணைதீவு சம்பந்தப்பட்ட மேலதிக தரவுகளையும் வழங்க உள்ளோம்.

அதுவரை ஒத்துழைக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டதற்கமைய இப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. எனினும் இச்சந்திப்பில் தமக்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்காவிடின் போராட்டம் வேறு வடிவத்திற்கு மாறும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.