ewrwerகிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்திற்குள் மழை வெள்ளம் பரவாமல் தடுப்பணை அமைக்குமாறு மக்கள் மாவட்ட செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 1983ம் ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்செயல்களினால் இடம்பெயர்ந்த மக்களுக்கென இக் கிராமம் உருவாக்கப்பட்டது.

அவசரமாக உருவாக்கப்பட்ட இக் கிராமத்தில் தாழ்நிலப் பகுதிகளை நோக்கி மழை காலத்தில் காட்டாறு வெள்ளம் கிராமம் முழுவதிலும் பரவுவதன் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். மேலும், இக் கிராமத்தில் கிழக்குப் பகுதியில் தொடங்கப்படும் அணையை, ஆனைவிழுந்தான் குளத்தின் அணையுடன் இணைப்பதன் மூலம் கிராமத்திற்குள் வெள்ள நீர் பரவாது எனவும், இது தொடர்பாக கடந்த முப்பது ஆண்டுகளாக அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் வெள்ளத் தடுப்பரண் அமைக்கப்படவில்லை எனவும் மக்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்திலே அடிப்படை வசதிகள் குறைந்த கிராமங்களில் ஒன்றாக இக் கிராமம் காணப்படுவதுடன் போக்குவரத்து, கல்வி, விவசாயம் உட்பட பல வசதிகள் இக் கிராமத்தில் இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். வெள்ள நீரை கிராமத்திற்குள் பரவாமல் தடுப்பதன் மூலம் கிராமம் அபிவிருத்தி அடையும் எனவும் மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.