பாதுகாப்பு செயலாளராக சிரேஷ்ட மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை புதிய இராணுவத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நியமனம் பெற்றுக்கொண்டார். அவர் இதுவரை காலமும் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியாக செயற்பட்டு வந்தார்.
கபில வைத்தியரத்ன கடந்த ஆண்டு சட்டமா அதிபர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். எனினும், 2014ல் பிஜி மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவதற்காக, சேவையிலிருந்து இடைவிலகிச் சென்றிருந்த காரணத்தினால் அவருக்கு சட்டமா அதிபர் பதவியைப் பெறும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கபில வைத்தியரத்ன, 1998 தொடக்கம் 2003 வரையான காலப்பகுதியில், அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தில் யூகோஸ்லாவியாமீது நடத்தப்பட்ட விசாரணையில் சட்டவாளராகப் பணியாற்றியிருந்தார்.