புளொட் அமைப்பினால் வருடாந்தம் அனுஷ்ட்டிக்கப்பட்டுவரும் வீரமக்கள் தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வு 16.07.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் வவுனியா கோவில்குளம் தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் நடைபெற்றது. புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் கழகத்தின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ச்சியாக மௌன அஞ்சலி, நினைவுச்சுடர் ஏற்றுதல், மலரஞ்சலி என்பன இடம்பெற்றன.
புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் கட்சியின் உபதலைவர்களில் ஒருவருமான தோழர் க. சந்திரகுலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், செயலாளர் திரு சு.சதானந்தன், ரெலோ அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வினோ நோகராதலிங்கம், தமிழரசுக் கட்சியின் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், ரெலோ அமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரன், வடக்கு மாகாண சபையின் புளொட் உறுப்பினர்கள் திரு க.சிவநேசன், ஜி.ரி.லிங்கநாதன், ஓய்வுபெற்ற அதிபர் திரு.சிவசோதி, புளொட் அமைப்பின் கனடா கிளையின் பொருளாளர் தோழர் சார்ள்ஸ், புளொட் அமைப்பின் நோர்வே நாட்டுப் பிரதிநிதி தோழர் ராஜன் மற்றும் வவுனியா, மன்னார் கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், வவுனியா ஆட்டோ சங்கத் தலைவர், வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர், கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், உயிர்நீத்தோர் உறவுகள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
அத்துடன் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த கழக முன்னாள் உறுப்பினர் சண்முகம் நித்தியானந்தன்(துரை), கிளிநொச்சி கண்டாவளையைச் சேர்ந்த நல்லதம்பி திருச்செல்வம்(சிலுக்கு), வீரபுரத்தில் வசிக்கும், கழக முன்னாள் உறுப்பினர் கனகராஜாவின் துணைவியார், வவுனியா இறம்பைக்குளத்தைச் சேர்ந்த கழக உறுப்பினர் கந்தசாமியின் துணைவியார் கமலாதேவி, மன்னார் தட்சணாமருதமடுவைச் சேர்ந்த கழக உறுப்பினர் செல்வநாயகம் கற்பகம் (அமலி) ஆகியோர்க்கு வாழ்வாதார உதவிகள் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையின் அனுசரணையுடன் வழங்கப்பட்டன. மேலும், புளொட் அமைப்பின் கனடா கிளையின் அனுசரணையுடன் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 10 கழக உறுப்பினர்களின் பிள்ளைகளின் கல்வித் தேவைக்காக சைக்கிள்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் 28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அணியின் ஒழுங்கமைப்பில் நங்கூரம் விளையாட்டுக் கழகம் நடாத்திய நா.மாணிக்கதாசன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி மற்றும் தோழர் ச.சண்முகநாதன் (வசந்தன்) ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண கரப்பந்தாட்டப் போட்டி என்பவற்றில் வெற்றியீட்டிய அணிகளுக்கான வெற்றிக் கிண்ணங்களும், பணப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வுகளுக்கான அனுசரணை சுவிஸின் புளொட் மத்திய குழு உறுப்பினர் தோழர் தீபன் ஊடாகவும் வழங்கப்பட்டிருந்தது. மேலும் வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் அங்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த சக கட்சித் தலைவர்கள் சக அமைப்பு போராளிகள், கழக கண்மணிகள் அனைவரது உருவப்படங்களுக்கும் விசேட அஞ்சலிகளையும் வணக்கங்களையும் செலுத்தியிருந்தனர்.