dfdகிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முட்கொம்பன் – செக்காலை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரம் வெட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கச் சென்ற வனவள அலுவலகர்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்களில் ஒருவரை மரம் அரியும் இயந்திரத்தினால் வெட்டியும் மேலும் சிலரை தாக்கிவிட்டும் சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவமானது வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வன வள திணைக்களத்தின் பூநகரி வட்டார அலுவலகத்தில் இருந்து, அதிகாரிகள் சிலர் சம்பந்தப்பட்ட பிரதேசத்திற்கு, கள விஜயம் மேற்கொண்டுள்ளனர். அப்போது, கிராமத்தில் இருந்து 2 கிலோமீற்றர் அளவில் அடர்ந்த பல பெறுமதியான மரங்களை கொண்ட பகுதியில், ஜந்துக்கும் மேற்பட்டவர்கள் மூன்று மரம் அரியும் இயந்திரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக மரங்களை வெட்டி, அவற்றை பலகைகளாக அறுத்துக் கொண்டிருப்பதனை அவதானித்துள்ளனர்.

அதிகாரிகளைக் கண்டதும் மரக் கட்டத்தல்காரர்கள் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர். இதனையடுத்து, அவர்களைப் பிடிக்க வன வள அலுவலகர்கள் முயற்சித்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட கைகலப்பில் சந்தேகநபர் ஒருவர் தான் வைத்திருந்த இயந்திரம் மூலம் அலுவலரின் கையில் வெட்டிவிட்டு, இயந்திரத்தையும் அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

ஏனையவர்கள் இயந்திரங்களுடன் தப்பிச்சென்றுள்ளனர். காயமடைந்த வனவள அலுவலகர் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகிறார். இது தொடர்பில், பூநகரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்களில் ஒருவர் ஏற்கனவே நீதிமன்றினால் பிடியாணை பிறபிக்கப்பட்டவர் என வனவள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பூநகரி முட்கொம்பன் பிரதேசத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் முதிரை, பாலை போன்ற பெறுமதியான நீண்ட காலம் முதிர்ந்த மரங்கள் காணப்படுகின்றன. எனவே, இந்த பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றமை தொடர்பில் பொது மக்களினால் அனைத்து தரப்பினரினதும் கவனத்திற்கும் கொண்டுவரப்படடுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது