joseph yuvarajpillaiசிங்கப்பூரின் தற்காலிக ஜனாதிபதியாக அரச தலைவரின் உயர்மட்ட ஆலோசகர் குழுவின் தலைவரும், இந்திய வம்சாவளி தமிழருமான ஜோசப் யுவராஜ்பிள்ளை (வயது 83) இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

சிங்கப்பூர் நாட்டில் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். அவ்வகையில் தற்போதைய ஜனாதிபதி டோனி டான் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதால் வரும் 23-ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என கடந்த 28-ம் திகதி அறிவிப்பு வெளியானது. இந்த முறை நடைபெறும் தேர்தலில் அந்த நாட்டின் சிறுபான்மையினரான மலாய் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் போட்டியிடலாம் என்ற விதிமுறை உள்ள நிலையில் நாட்டின் எட்டாவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாக்கோப் என்ற பெண்மணி அறிவித்துள்ளார். இதேபோல், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலபதிபர் முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளனர். இந்த தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் 12-ம் திகதிவரை பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர்களின் விபரம் 13-ம் திகதி அறிவிக்கப்படும். போட்டியில் இருந்து இரு வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ, விலகி கொண்டாலோ புதிய அதிபர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அப்படி நடைபெறாதபட்சத்தில் 23-ம் திகதி நடைபெறும் தேர்தலில் சிங்கப்பூர் மக்கள் வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தற்போதைய ஜனாதிபதி டோனி டான் கெங் யாம்-மின் ஆறாண்டு பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் சிங்கப்பூர் நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக இந்திய வம்சாவளி தமிழரான ஜோசப் யுவராஜ் பிள்ளை(83) இன்று பதவி ஏற்றுக்கொண்டார். நீண்டகாலமாக ஜனாதிபதியின் உயர்மட்ட ஆலோசகர் குழுவின் தலைவராக பொறுப்பு வகித்துவரும் ஜோசப் யுவராஜ் பிள்ளை, இதற்கு முன்னரும் சிங்கப்பூர் அதிபர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் வேளைகளில் அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக இவர் பலமுறை இப்பதவியை திறம்பட நிர்வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் டோனி டான் கெங் யாம் கடந்த மே மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, ஜோசப் யுவராஜ் பிள்ளை சிங்கப்பூரின் தற்காலிக அதிபராக பொறுப்பு வகித்தார். இதுபோல், 60 முறைக்கும் மேலாக தற்காலிக அதிபர் பதவியை வகித்துள்ள இவர், கடந்த 2007-ம் ஆண்டு அந்நாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது அதிகபட்சமாக 16 நாட்கள் சிங்கப்பூரின் அதிபர் பொறுப்பில் இருந்துள்ளார்.

சிங்கப்பூரில் ஜனநாயக அமைப்பின்படி புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் முறை கடந்த 1991-ம் ஆண்டில் அறிமுகம் ஆன நாளில் இருந்து அதிபரின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதிபர் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த பின்னர் இந்த முறை தேர்தல் நடப்பதால் அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, அதிபரின் உயர்மட்ட ஆலோசகர் குழுவின் தலைவர் அல்லது பாராளுமன்ற சபாநாயகர் ஆகியோர் தற்காலிக அதிபராக பொறுப்பேற்க வேண்டும். அவ்வகையில், 60 முறைக்கும் மேலாக அதிபர் பதவியை தற்காலிகமாக வகித்துள்ள அனுபவம் மிக்கவரான ஜோசப் யுவராஜ் பிள்ளை, சிங்கப்பூரின் தற்காலிக அதிபராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

வேட்பு மனு தாக்கலின்போது போட்டி இல்லாமல் போனால், வரும் 13-ம் தேதி வரையிலோ, அல்லது போட்டி உருவாகி, வாக்குப்பதிவு நடந்தால் வரும் 23-ம் தேதி வரையிலோ இந்தப் பதவியில் இவர் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு எல்லாத்துறைகளிலும் நிகரில்லாத பணியாற்றிய ஜோசப் யுவராஜ் பிள்ளை 1971-ம் ஆண்டிலிருந்து 1996 ஆண்டு வரை தொடர்ந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாய் இருந்து சாதனைகள் படைத்தவர். சாதிக்கத் துணை புரிந்தவர். மேலும், சிங்கப்பூர் முன்னேற்ற வங்கி, சிங்கப்பூர் பங்கு வர்த்தக பரிமாற்ற நிறுவனம், நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அரசின் நிரந்தர செயலாளர் உட்பட பல பதவிகளை வகித்து வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.