Captureவிடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கை வந்திருந்த ஐக்கிய இராச்சியத்தின் ஊடகவியலாளர் ஒருவர், அறுகம்பேயில் முதலை தாக்கி மரணமானார்.

பிரித்தானியாவின் சர்ரே பகுதியைச் சேர்ந்த போல் மெக்ளீன் (வயது 25) என்ற, ‘பைனான்ஷியல் டைம்ஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளரே இவ்வாறு பரிதாபமாக மரணமானார். நண்பர்களுடன் அறுகம்பே பகுதியில் உல்லாசமாகப் பொழுதுபோக்கிக் கொண்டிருந்த இவர், சற்று அண்மைப் பகுதிக்கு சென்றபோது, ‘முதலைக் குன்று’ என அழைக்கப்படும் நீர்ப்பரப்பில் அவரை முதலை இழுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்ட உள்ளூர் மீனவர் ஒருவர் தெரிவித்தார். இறுதியாக, நீரில் மூழ்கியபடி அவர் அபயம் கோரி தனது கைகளை ஆட்டினார் என்றும் அவர் தெரிவித்தார். மெக்ளீனின் உடலைத் தேடும் நடவடிக்கையில் அப்பகுதி பொலிஸாரும் மீனவர்களும் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய தகவலின்படி, கைகழுவச் சென்றபோது, நேற்று முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம், இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளதாக பானம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையினர் மற்றும் பானம பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் பின்னரே, அருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.