myanmar Protes jaffnaவடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மியன்மார் படுகொலைகளை நிறுத்தக் கோரி இன்று காலை யாழில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

யாழ் கோவில் வீதியின் கைலாச பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று முற்பகல் 11மணிக்கு இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருத்தனர். இவ்வாறு ஆலயத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் பேரணியாக யாழிலுள்ள ஐ.நா அலுவலகத்தை சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா அலுவலகத்தில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. படுகொலைகளை நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க ஐ.நா சபை ஆணையாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.