australia refugeesஅவுஸ்திரேலியாவின், பபுவா நியூகினியாவில் உள்ள மனூஸ் தீவில் தற்கொலை செய்து உயிரிழந்த, இலங்கை அகதியை, தாய்நாட்டுக்கு அனுப்புவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தமிழ் அகதிகள் சபையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார். மனூஸ் தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 32 வயதுடைய ரஜீவ் ராஜேந்திரன் என்பவர் கடந்த திங்கட்கிழமை (02) உயிரிழந்தார். னினும் அவரது சடலத்தினை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ் அகதிகள் சபையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் மேலும் கருத்து வெளியிடுகையில், “கிளிநொச்சியில் உள்ள அவரது உறவினர்களுடன் நாம் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளோம். உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கு 7 ஆயிரத்து 500 அவுஸ்திரேலிய டொலர்கள் செலவாகும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு, உறவினர்களிடத்தில் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உயிரிழந்தவரின் சடலம் மனூஸ் தீவில், பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. எமக்கு சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறோம் என்று கூறினார். இதேவேளை மானஸ் தீவில் தற்கொலை செய்து கொண்ட ஈழ ஏதிலியின் உடலத்தை இலங்கைக்கு இலவசமாக அனுப்ப வேண்டும் என்று, அவுஸ்திரேலிய ஏதிலிகள் சபை வலியுறுத்தியுள்ளது. மானஸ்தீவில் உள்ள ஏதிலிகள் முகாமில் தங்கி இருந்த ரஜீவ் ராஜேந்திரன் என்ற 32 வயதான ஏதிலி, கடந்த திங்கட்கிழமை தற்கொலை செய்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

அவர், நீண்டகாலம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை மற்றும் அவரது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தமை போன்ற காரணங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது குடும்பத்தாரிடம் 6000 தொடக்கம் 7000 டொலர் வரையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் கோரிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது செலவில் அவரது உடலத்தை அனுப்ப வேண்டும் என்று அவுஸ்திரேலிய ஏதிலிகள் சபையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.