தமிTamil_people peravaiழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தின் அடிப்படையிலேயே புதிய அரசியல் யாப்பு அமைய வேண்டும் என்பது தமது நிலைப்பாடு என தமிழ் மக்கள் பேரவையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் மக்களின் அடிப்படைப் பிறப்புரிமைகள் மறுதலிக்கப்படுகின்ற இடைக்கால அறிக்கையை பிரதான இரண்டு கட்சிகளும் ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால் தாமும் அதனை ஏற்றுக் கொள்ளத் தாயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எழுத்து மூலம் வாக்குறுதி அளித்துள்ளமை மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசமைப்பு சபையின் வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வு என்னவென்பது தமிழர் தரப்பால் தெளிவாக முன் வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற ஒரு பொதுவான சர்வதேசக் குற்றச்சாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வினை தீர்க்கமாக வெளிப்படுத்தும் ஒரு வரைபை உருவாக்குவதற்காகத் தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் உபகுழுவை கடந்த 2016 ஆம் ஆண்டு தை மாதம் நிறுவியது.

தமிழர் தாயகம், இலங்கைத் தீவுமற்றும் அனைத்துலக நாடுகளில் வாழும் பல்வேறு தமிழ் தரப்புக்களிடமிருந்து எழுத்து வடிவிலும்,வாய்மொழி மூலமாகவும் பெறப்பட்ட பெருமளவான அறிவுரைகளை உள்வாங்கி, குறித்த தீர்வுத் திட்டம் இறுதிவடிவம் செய்யப்பட்டது.

இவ்வாறாக, தமிழ் மக்களின் ஏகோபித்த பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட இந்ததீர்வுத் திட்ட வரைபானது, இலங்கை அரசமைப்பு சபையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் எம்மால் வழங்கப்பட்டது.

அத்துடன், சிறீலங்கா அரசாங்கத்தின் அரசமைப்புக்கான பொதுமக்கள் கருத்தறியும் குழுவிடமும் எம்மால் நேரடியாகக் கையளிக்கப்பட்டது.

மேலும் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் அந்தத் தீர்வுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவை ஒட்டு மொத்த தமிழ்த் தேசிய இனத்தின் பிரதிநிதியாகவே இந்த அரசியல் தீர்வுத் திட்டத்தை வெளியிட்டது என்பதனை வடக்கிலும் கிழக்கிலும் நடத்தப்பட்ட ´எழுகதமிழ்´ பேரணிகள் நிரூபித்தன.

அந்தவகையில் தமிழ்த் தேசிய இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வு இன்னதுதான் என்பது மீளவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்த் தேசிய இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வாக தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள கூட்டாட்சித் தீர்வுத் திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள தமிழ்த் தேசத்தின் அடிப்படை அரசியற் பிறப்புரிமைகளான பிரிபடாத தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசத்திற்கானஅங்கீகாரம் என்பவற்றை சிறீலங்காவுக்கான அரசமைப்பு உருவாக்க சபையின் வழிகாட்டல் குழுவால் வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை முற்றாக நிராகரித்துள்ளது.

அரசமைப்பு உருவாக்க சபையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட, தமிழ் மக்களின் அடிப்படை அரசியற் பிறப்புரிமைகளை வழிப்படுத்தல் குழுக் கூட்டங்களில் வலியுறுத்தவில்லை என்பது மட்டுமன்றி, இந்த அடிப்படைப் பிறப்புரிமைகளை மறுதலிக்கும் நிலைப்பாட்டுக்கு ஒப்புதலும் அளித்துள்ளனர்.

வழிப்படுத்தல் குழுவின் இடைக்காலஅறிக்கைக்குதாம் வழங்கியுள்ள பின்னிணைப்பில், தமிழ் மக்களின் அடிப்படைப் பிறப்புரிமைகள் மறுதலிக்கப்படுகின்ற இந்த இடைக்கால அறிக்கையை பிரதான இரண்டு கட்சிகளும் ஏற்றுக் கொள்ளுமாக இருந்தால் தாமும் அதனை ஏற்றுக் கொள்ளத் தாயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எழுத்து மூலம் வாக்குறுதி அளித்துள்ளமை மிகுந்த ஏமாற்றமளிக்கின்றது.

புதிய அரசமைப்பு உருவாக்கம் ஒன்றின் ஊடாக தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வுகாணப்படுதல் என்பதனை விடுத்து, ´தீர்வு´ இன்னதுதான் என்ற விடயத்தில் அரசாங்கத்துடன் முதலில் ஓர் இணக்கப்பாடு காணப்பட வேண்டும். அதன் பிற்பாடு, அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்படல் வேண்டும் என்பதே தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடாகும்.