trinco riversதிருகோணமலையில் புனரமைக்காமல் காணப்படும் 100 குளங்களை, அடுத்த வருட இறுதிக்குள் புனரமைத்து தருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில், விவசாயத்தின் விளைச்சல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற ஏர்பூட்டு விழாவில், பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யான் ஓயா திட்டத்தின் ஊடாக கந்தளாய் குளத்தை புனரமைப்பு செய்வதைப் போன்று, திருகோணமலை மாவட்டத்திலுள்ள 100 குளங்களையும் அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கியுள்ளேன். அத்துடன், எமது நாட்டு மக்கள் விவசாயத்திலே தனது வாழ்வாதாரத்தை ஈட்டி செல்கின்றார்கள். நாம் 2600ஆண்டுக்கு மேல் பழமையான மக்கள். உங்களுக்கு தெரியும், விஜயகுமாரி காலத்தில் இருந்து நாம் விவசாயாத்தை ஜீவனோபாயமாகக் கொண்டு எமது பிள்ளைகளின் தேவைகளை நிறைவு செய்கின்றோம்.

ஆகையால், நாம் கடந்த பல வருடங்களுக்கு முன்பு வாஸ்மதி எனும் நெல்லை வெளிநாட்டில் இருந்து கொள்வனவு செய்தோம். எனவே, இவ்வாறான இறக்குமதிகளை தடுத்து, நிரந்தமாக எமது நாட்டில் பல வகையான நெல் இனங்களை உற்பத்தி செய்து, தீர்வை பெற கூடியவர்களாக நாம் ஆகிவிட்டோம். இவ்வாறான செயற்திட்டம் தான் அமெரிக்கா. ஜப்பான் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் முன்னேற, தன்னிறைவுப் பெற காரணமாக அமைந்துள்ளது.

அதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கும் இவ்வாறான செயற்திட்டங்களுக்கு, விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் விவசாயத்தினை வளப்படுத்தலாம். “நஞ்சற்ற நாடு” எனும் தொனிப்பொருளில், உணவு உற்பத்தி தேசிய வேலைதிட்டத்தின் ஊடாக அதாவது நாட்டில் உள்ள மக்களின் விவசாயத்தின் வாயிலாக தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற முடியும்.

திருகோணமலையில் இத்திட்டத்தின் கீழ், 22 கமநலசேவை நிலையங்களின் ஊடாக,பெண்கள் விவசாய சங்கத்தை உருவாக்கி உள்ளனர். அதன் ஊடாகத்தான், ஒவ்வொரு கமநல சேவை நிலையங்களிலும் உள்ள, சுமார் 800க்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு விதைகள், கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, இவ்வாறான முன்னெடுப்பின் ஊடாக பல வகையிலும் எமது நாட்டை, மாவட்டத்தை முன்னேற்ற முடியும். அத்துடன் திருகோணமலைப் பகுதியில் முக்கியமாக செய்ய வேண்டிய அபிவிருத்தி வேலைகளை, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தீர்வினை பெற்றுத்தருவேன் என, ரோகித்த போகொல்லாகம குறிப்பிட்டுள்ளார்.