மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, வைத்திய பீட மாணவர்கள், இன்று கொள்ளுப்பிட்டியில் மேற்கொண்ட ஆர்பாட்டப் பேரணி மீது, பொலிஸார் குண்டாந்தடி பிரயோகம் மேற்கொண்டதில் 18 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக, காலி வீதியின் ஒரு பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. கொள்ளுப்பிட்டி சந்தியில் பேரணி நடத்தியவர்கள் கடந்து செல்ல முற்பட்ட போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் பதில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.