railway strikeகொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களின் ரயில் சேவைகள் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. ரயில் சாரதிகளின் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களின் தீடீர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சாரதி உதவியாளர்களை இணைத்துக்கொள்ளும் ஒழுங்கு விதிகள் சீர்த்திருத்தப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ரயில் சாரதிகளின் பணிபகிஷ்கரிப்பினால் ஏற்பட்டுள்ள ரயில் தாமதம் காரணமாக பயணிகள் குழப்பமடைந்துள்ளதால் கோட்டை ரயில் நிலையத்தில் தீவிர நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலைமை காரணமாக, மருதானை ரயில் நிலையத்திற்கு சிறப்பு பொலிஸ் படைப்பிரிவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் ஆலோசகர் தடல்லகேவுடன் இன்றுமாலை இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கைக்கு தாமும் ஒத்துழைப்பு வழங்குவதாக ரயில்வே பாதுகாப்பு ஊழியர்கள் சங்கமும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது