dfdfதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து எதிர்வரும் 13ம் திகதி வெள்ளிக்கிழமை வடமாகாணம் தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கதவடைப்பு போராட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும், அவ்வாறு மாற்றப்பட்டதன் பின்பு, தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவு காணவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து, அநுராதபுரம் சிறையில் சாகும் வரை உணவுத் துறப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், முழுத் தமிழ் அரசியற் கைதிகளையும் ஓர் அரசியற் தீர்மானத்தினூடாக விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும்,

அசமந்தப் போக்கைக் கைவிட்டும் – மழுப்பல் பதில்களை வழங்காமலும் – அனைத்து தமிழ் அரசியற் கைதிகளையும் விடுவிப்பதற்கான நேரடி அழுத்தத்தினை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்குமாறு எமது பாராளுமன்றப் பிரதிநிதிகளை வற்புறுத்தியும், வரும் 14.10.2017, சனிக்கிழமை, யாழ்ப்பாணம் வருகை தரவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு, தாமதமற்ற தீர்வு காணவேண்டிய இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையை உணர்த்துவதற்குமாக, எதிர்வரும் 13.10.2017, வெள்ளிக்கிழமை, வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பினை மேற்கொள்ளுவதற்கு அனைத்து தமிழ் மக்களையும் நாம் உரிமையோடுஅழைக்கின்றோம்.

அவசர மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துச் செயற்பாடுகளையும் முழுமனதோடு நிறுத்தி, நியாயத்தோடும் சாவோடும் போராடுகின்ற தமிழ் அரசியற் கைதிகளுக்கு எமது ஆத்மபலத்தைக் கொடுப்போம். தமிழ் அரசியற் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்ற செய்தியை – இந்தநாட்டின் அரசாங்கத்திற்கும், எமது பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கும், இதன் பொறுப்புடைய ஒவ்வொரு தரப்புக்கும் உறுதியாகத் தெரிவிக்க எதிர்வரும் 13.10.2017, வெள்ளிக்கிழமை காலை 09:30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஒன்றெனத் திரள்வோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.