patti-01மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் மகனும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

புன்னக்குடாவில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே 27 வயதுடைய தாயும் அவரது 11வயது மகனும் கழுத்து வெட்டபட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.கழுத்தறுத்துக் கொலை செய்யபட்டவர்கள் பீதாம்பரம் மதுசாந்தி மற்றும் 11 வயதுடைய மதுசான் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கும் பொலிஸார், சம்பவம் தொடர்பில் இன்று காலை 8.30 மணிளவிலேயே தகவல் கிடைத்ததாக தெரிவித்தனர். வீட்டின் கூரையினை பிய்த்துக்கொண்டு உள் நுழைந்தவர்கள் இருவரையும் வெட்டிக்கொலை செய்துள்ளதுடன், அங்கிருந்த நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் ஏழு வருடங்களுக்கு மேலாக மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன்  மோப்ப நாயின் உதவியுடன் இக்கொலை தொடர்பாக மூவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளி தினத்தில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தினால் அப்பகுதியே சோக மயமானதாக காட்சியளிக்கின்றது.