former LTTE membersவவுனியா, கனகராயன்குளம் பகுதியிலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பொலிசார் திரட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருடைய விபரங்களை பெறுவதற்காக நேற்று 27ஆம் திகதி முற்பகல் உறவினருக்கு கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தொலைபேசியில் அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன் தற்போது குறித்த முன்னாள் போராளி எங்குள்ளார்? என்ன தொழில் புரிகின்றார்? திருமணமாகியுள்ளதா? போன்ற விபரங்களை கேட்டுப் பெற்றுள்ளதாக முன்னாள் போராளியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விபரங்களை பொலிசார் சந்தேக கண்ணோட்டத்துடன் விபரங்களைப் பெற்றுவருவது எமக்கு தர்ம சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் போராளியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கனகராயன்குளம் பகுதியில் பல இடங்களிலும் சமூகத்துடன் இணைந்துள்ள முன்னாள் போராளிகளின் விபரங்களை பல கோணங்களில் பொலிசார் சிவில் உடையில் சென்று திரட்டிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.