iranaimaduகிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு அருகில் முகாம் அமைத்திருந்த இராணுவத்தினர் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இரணைமடுக்குளத்தின் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த பகுதியில் அமைந்திருந்த நீர்பாசன திணைக்களத்தின் விடுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை குறித்த இரணைமடுக் குளத்திற்கு சுற்றுலாவாக வருகை தரும் பிரயாணிகளிற்கு சிற்றுண்டிச்சாலை அமைத்து வியாபாரமும் செய்து வந்த நிலையில் குறித்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளது.

இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் நிறைவடையும் நிலையில் குறித்த பகுதி நீர்பாசன திணைக்களத்திற்கு அத்தியாவசியமான பகுதியாக காணப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த பகுதியைவிட்டு வெளியேறியுள்ளனர். எதிர்வரும் காலங்களில் இரணைமடு குளத்தினை பார்வையிட அனுமதிக்கப்பட்ட பகுதியில் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இன்றி செல்லலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.