paffrelஅனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், அவர்கள் வேறொரு நாட்டின் குடியுரிமையைக் கொண்டவர்கள் இல்லை என்று சத்தியப்பிரமாணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பு, சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்ற அடிப்படையில் அண்மையில் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டது. இந்நிலையில் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாங்கள் இரட்டைக் குடியுரிமைக் கொண்டவர்கள் என்பதை மறைப்பார்களாக இருந்தால், அது பொதுமக்களை ஏமாற்றும் செயல். எனவே இந்த விடயத்தில் அவதானம் செலுத்துமாறு சபாநாயகரை, பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கடிதம் ஒன்றின் மூலம் கோரியுள்ளார்.

இது தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் மகிந்த சமரசிங்க கருத்து வெளியிட்டார். உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் எவரேனும் தொடர்ந்தும் இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளமையை மறைத்திருப்பார்களாயின், அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.