jailசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தால் அண்மைக்காலமாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்த விடயம் தொடர்பில் உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாததன் காரணத்தினால், அரசாங்கத்திற்கு தொடர்சியான அழுத்தங்களை கொடுக்க தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து காலை 10.00மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் தொடர்பான போராட்டங்கள் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.