vavuniyaவவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று (20.11.2017) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது.
வவுனியா நகரபள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் 14 கடைகள் காணப்படுகின்றன. அந்த கடைத்தொகுதியில் இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.இதனையடுத்து, தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த கடைப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்தே கடைகள் தீப்பித்து எரிந்ததாகவும் அப்பகுதியில் தங்கியிருந்தோர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் வினாவிய போது,
இக் கடைகளின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டிருந்தால் கடையில் முன் கதவுகள் முற்றாக சேதமடைந்திருக்கும் ஆனால் கதவுகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை மற்றும் கடையின் ஒரு பக்கத்திலிருந்தே தீப்பற்றியதற்கான அடையாளங்கள் காணப்படுவதாலும் மின்சார ஒழுக்கினால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக தெரிவித்தனர்.