vote18 வயது பூர்த்தியான இளைஞர்களுக்கு தாமதமின்றி வாக்களிக்கும் உரிமையை வழங்க ஏதுவாக, துணை வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

1980ம் ஆண்டு 44ம் இலக்க வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 01ம் திகதி 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள முடியும்.அதற்காக வாக்காளர் இடாப்பு வருடாந்தம் திருத்தப்படும். எனினும், ஒவ்வொரு வருடமும் குறித்த பணியினை மேற்கொள்வதற்கு எடுக்கும் கால எல்லைக்குள் ஏதேனுமொரு தேர்தல் வரும் சந்தர்ப்பத்தில், முன்னைய வருடத்தின் வாக்காளர் இடாப்பே பயன்படுத்தப்பட்டு வருவது வழமையாகும்.

இதனால், குறித்த வருடத்தில் 18 வயதினை அடைகின்ற இளைஞர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு ஒவ்வொரு வருடமும் துணை வாக்காளர் இடாப்பொன்றை தயாரிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணைக்குழு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.

அதற்கு அவசியமான அம்சங்களை உள்ளடக்கி 1980ம் ஆண்டு 44ம் இலக்க வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டத்தினை திருத்தம் செய்வது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.