nominationவடக்கில் உள்ளூராட்சிசபை தேர்தல் இடம்பெறவுள்ள ஒரே ஒரு நகரசபையான சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இக்கட்டுப்பணம் இன்றையதினம் செலுத்தப்பட்டுள்ளது. இருபத்தொரு உறுப்பினர்களைக் கொண்ட யாழ் சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்கள் யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளது. சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளாத சாவகச்சேரி நகரசபை உள்ளிட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கு வேட்பு மனுக்களைக் கோருமாறு மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்தல் விடுத்திருந்தது. இதற்கமைவாக இன்றையதினம் முதலாவது கட்சியாக ஈ.பி.டி.பி கட்சியினர் தாம் போட்டியிடுவதை உறுதிப்படுத்தி கட்டுப்பணத்தை யாழ் மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஏ.அகிலனிடம் செலுத்தி வேட்பாளர் விண்ணப்பப்படிவத்தை பெற்றுள்ளனர்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள் குறித்த கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்காக தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை, தேர்தல்கள் செயலகம் கோரியுள்ளது. அதனடிப்படையில், டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர், விண்ணப்பம் செய்யலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.