studentஅரசாங்க பாடசாலைகளில் உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களினதும் அடையாளத்தை உரிய முறையில் உறுதி செய்யவும், பரீட்சை நடவடிக்கையின் போது, பரிட்சார்த்திகள் சார்ந்த விடயங்களை அதிகாரிகள் இலகுவாக அறிந்து கொள்வதற்காகவும், புதிய நடைமுறையொன்று முன்மொழியப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை முன்வைக்க, புத்தி ஜீவிகளை கொண்ட குழுவொன்றை, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமித்திருந்தார். இந்த குழுவினராலேயே, குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பாடசாலைகளுக்குள் உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் இலக்கமொன்றை (Unique Student Code) அறிமுகப்படுத்தவும், கைவிரல் (Finger Print) அடையாளத்தின் மூலம் ஆள் அடையாளத்தை உறுதி செய்து அதனுடாக கியூ ஆர் (QR)  குறியீடு ஒன்றை தயாரிப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கம் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் முக்கிய பரீட்சைகளின் போது, பயன்படுத்துவதற்கும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முக்கிய பரீட்சைகளான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை, கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றின் போது, மாணவர்களின் செயற்திறன், ஆற்றல்களை கண்காணிக்கவும், நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என, அரசாங்கத் தகவல் திணைக்களச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இதேபோன்று பரீட்சைகளின் போது நடைபெறும் மோசடிகளைத் தடுக்கவும் இது பெரும் பயனுள்ளதாக அமையும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.