rohithaகிழக்கு மாகாணத்தில் கல்வித்துறை பின்னடைந்து காணப்படுவதை தான் விரும்பவில்லை எனவும் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், இடமாற்றங்களைப் பெற்றுத்தருமாறு கோரி வர வேண்டாம் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலைகளுக்குக் கடமைக்குச் செல்லுமாறும் அவர் கோரினார். கிழக்கு மாகாணக் கல்வியமைச்சும் கல்வித் திணைக்களமும் ஆசிரியர் பற்றாக்குறைவாக காணப்படுகின்ற பாடசாலைகளைத் தெரிவு செய்தே, புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை, உரிய பாடசாலைகளுக்கு நியமித்துள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்களைப் பெற்று கிராமப்புர மக்களையும், கிழக்கு மாகாணத்தையும் கல்வியில் முன்னேற்றமடையச் செய்ய வேண்டுமென்றார்.

மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் தன்னைச் சந்திப்பதற்கு உங்களுக்கு உரிமைகள் இருந்த போதிலும் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகள் இடமாற்றம் பெற்றுத்தருமாறும் பாடசாலைகளை மாற்றி தங்களுக்கு இலகுவான இடத்தை வழங்குமாறு கோரியும் வர வேண்டாம் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.