ரயில் ஊழியர்களினால் கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக லட்சக்கணக்காக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.கடந்த இரண்டு நாட்களாக ரயில் இல்லாத சிரமத்தை எதிர்நோக்கியுள்ள பயணிகளின் நலன்கருதி, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ரயில் பணியாளர்கள் தொழிற்சங்கங்களுடன் நேற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

எனினும், இந்த கலந்துரையாடல் தோல்வியடைந்த நிலையில், ரயில் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இதையடுத்து, ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கையொப்பமிட்டதாகவும் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க குறிப்பிட்டார்.
இந்த நிலையில், போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளமையினால், இன்றைய தினத்திற்குள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்கள் கட்டாயம் சேவைக்கு திரும்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு சேவைக்கு திரும்பாத ஊழியர்கள் சேவையை விட்டு விலகியவர் என கருதப்படுவார்கள் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.
ரயில்சேவை மீள ஆரம்பிக்கப்படும் வரை அனைத்து நகரங்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரயில்பயணச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பேருந்தில் பயணிக்க முடியும் என சபையின் தலைவர் ராமால் சிறிவர்தன குறிப்பிட்டார்.
ரயில் சேவை மீள வழமைக்கு திரும்பும் வரை தமது பேருந்து சேவை தொடரும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ரயில்சேவைக்கு ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.