எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணிக்கு ஒரு இணக்கப்பாடு இல்லையென்றால் தனித்து போட்டியிடவும் நாம் தயாராக உள்ளோம். எமக்கு சின்னம் முக்கியம் இல்லை. எண்ணம் தான் முக்கியம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மஸ்கெலியா நகரில் இன்று காலை இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவோம். அது மட்டுமில்லாமல் தனித்து போட்டியிடும் பகுதிகளில் முற்போக்கு சிங்கள கட்சிகளையும், முற்போக்கு மூஸ்லீம் கட்சியினரையும் இணைத்து போட்டியிட நாம் தயாராகவுள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த பல வருட காலமாக பல அரசாங்கங்களுக்கு ஆதரவளித்துள்ளது.
இந்திய அரசாங்கத்திற்கும் ஆதரவளித்துள்ளது. எனினும், இன பிரச்சினை தீர்ந்து விட்டதா என்று கேட்க விரும்புகின்றேன்.

அவர்களுக்கு ஒரு சட்டம். எனக்கு ஒரு சட்டமா? இனப்பிரச்சினைக்கு காரணம் மொழி பிரச்சினை தான் என்று நான் சொல்லவில்லை. மொழி பிரச்சினை தீர்க்கப்பட்டு அதிகார பகிர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே இன பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதை நாம் பெறுவோம். அதற்கு முன்னோடியாக மொழி பிரச்சினை தீர்க்கப்படும்.

அதேவேளையில் அனர்த்தம் தொடர்பில் தமிழ் மொழி மூல அறிக்கைகள் வழங்காது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடம் நேரடியாக முறையிட்டுள்ளேன்.
அந்த பிரச்சினை தற்பொழுது தீர்க்கப்பட்டுள்ளது. இப்பொழுது தமிழிலும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றது.

வடக்கில் குடியமர்த்தப்பட்ட மலையக மக்களுக்கு அங்கு பிரச்சினைகள் இருக்கின்றது. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி முனைகின்றது. இருந்த போதிலும் அவர்களுக்கான பிரச்சனைகள் உக்கிரமானால் அவர்களுக்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இ.தொ.கா பெரும் சக்தி இல்லை. ஒரு காலத்தில் இருந்தார்கள். தற்பொழுது சக்தியை இழந்து விட்டார்கள். அவர்கள் குறித்த சக்தியை சரியாக பயன்படுத்த தவறிவிட்டார்கள். இப்பொழுது ஒப்பாரி வைப்பதில் எந்த பயனும் இல்லை. நாங்கள் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளோம் என்றார்.