காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்குரிய திரவியங்களை பரிமாறிக் கொள்ளும் பணியினை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை துறைமுகம் ஸ்தாபிக்கப்பட்டது.

குறித்த துறைமுகத்தினை மறுசீரமைப்பு செய்வதற்கான முன்மொழிவுகளை இலங்கை துறைமுக அதிகார சபை முன்வைத்துள்ளது.இங்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த வகையில், அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதற்கு தேவையான 50 ஏக்கர் காணியினை இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திடம் இருந்து இலங்கை துறைமுக அதிகார சபைக்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல்துறை விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் பால் உற்பத்தி வலயமைப்பினை விருத்தி செய்யும் வேலைத் திட்டத்தினை 59.8 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் செயற்படுத்துவது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது