1200 மெகா வோட் கொள்ளளவைக் கொண்ட இரண்டு அனல்மின் உற்பத்தி நிலையங்களை திருகோணமலை மற்றும் நுரைச்சோலையில் நிர்மாணிப்பதற்கான அனுமதி கோரி, அமைச்சரவைப் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம மற்றும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஒன்றிணைந்த அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளனர். அந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய, 600 மெகாவோட் கொள்ளளவைக் கொண்ட அனல்மின் நிலையமொன்றை திருகோணமலையில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், 600 மெகாவோட் கொள்ளளவைக் கொண்ட அனல்மின் நிலையமொன்றை நுரைச்சோலையில் நிர்மாணிப்பதற்கு அமைச்சரவைப் பத்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்காக திருகோணமலையில் 600 ஏக்கர் நிலப்பரப்பும், நுரைச்சோலையில் 500 ஏக்கர் நிலப்பரப்பும் தேவைப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

நிலக்கரியின் ஊடாக சூழலுக்கு விடுவிக்கப்படும் கார்பன்-டை-ஆக்சைட் ஐ குறைப்பதற்கான செய்கைகளை மேற்கொள்வதை அத்தியாவசியக் கொள்கையாக அங்கீகரித்து, இந்த மின் உற்பத்தி நிலையம் உள்ளடங்கும் வகையிலான வலயமொன்றை அமைப்பது தொடர்பிலும் அமைச்சரவைப் பத்திரத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மின்சக்தி தேவையின் 50 வீதத்தை பாரியளவிலான நீர்மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாகவும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியின் ஊடாகவும் பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் முக்கிய கொள்கை என அனல் மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.