யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தனது பதவி விலகல் கடிதத்தை வடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் கடந்த 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக எம்மிடம் கையளித்துள்ளார்.பதவி விலகல் முறைப்படியாக எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் ஆணையாளருக்கு முறைப்படி இப் பதவி விலகல் தொடர்பான அறிவித்தலை அனுப்பி வைக்குமாறு பேரவை செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன். அதன்படி இம்மானுவேல் ஆர்னோல்ட்டின் பதவி விலகல் தொடர்பான கடிதம் இன்று தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரேரித்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைகளின் தலைமை பதவிகள் யார் யாருக்கு வழங்கப்படும் என்பதை தற்போது அறிவிப்பதில்லை என்று தீர்மானித்து இருந்த போதும் இந்த விடயத்தில் அவர் மாகாண சபை உறுப்பினராக இருந்த காரணத்தினால் அதிலிருந்து அவர் தகுந்த நேரத்துக்கு ராஜினாமா செய்யவேண்டிய தேவை இருந்த காரணத்தினாலேயே அவரை மேயர் பதவிக்கு பிரேரித்து மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கின்றார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகர மேயர் வேட்பாளராகதான் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடுவார் என அவர் மேலும்தெரிவித்தார்.