வவுனியா, கணேசபுரம் 40 வீட்டுத்திட்டப் பகுதியில் வீடு ஒன்று தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கணேசபுரம், 40 வீட்டுத்திட்டப் பகுதியில் வசிக்கும் இராமமூர்த்தி ஜெகநாதன் குடும்பத்தினர் வவுனியா நகருக்கு சென்று வீடு திரும்பிய நிலையிலேயே அவர்கள் வசித்த தற்காலிக வீடு எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அயலவர்கள் தண்ணீர் ஊற்றி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதும், வீட்டு உபகரணங்கள், உடு புடவைகள் என அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இது தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.