மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளதாகவும் பஸ்வண்டி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கூளாவடி பிரதான வீதி 6 ஆம் பிரிவைச் சேர்ந்த 23 வயதுடைய யாதவன் மகாரிசி என்பவரே இதில் உயரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் சம்பவதினமான நேற்றுமாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஏறாவூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதி வீதி வளைவில் எறாவூரில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ்வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேவேளை தனியார் பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.