ஐ.நா.வின் மனித உரிமை விசாரணை அதிகாரி தங்கள் நாட்டுக்குள் நுழைய மியன்மார் தடை விதித்துள்ளது. மியன்மாரில் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் உட்பட, மியன்மாரின் மனித உரிமைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக விசாரணை அதிகாரி யாங்ஹீ லீ மியன்மார் செல்ல இருந்தார்.
ஆனால், அவர் தனது பணியைச் செய்யும் போது நடுநிலையாக இல்லாததால் மியன்மாருக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. ரக்கைனில் ஏதோ மோசமான செயல் நடக்கிறது என்பதை தனக்கு தடை விதிக்கப்பட்ட முடிவு காட்டுகிறது என யாங்ஹீ லீ கூறியுள்ளார்.அண்மையில் ரக்கைனில் ஒரு கிராமத்தில் உள்ள புதைகுழியில் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக மியன்மார் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், கடந்த ஜூலை மாதம் மியன்மாருக்கு சென்ற யாங்ஹீ லீ, மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலை தெரிவித்திருந்தார்.
அத்துடன், தன்னுடைய பயணத்துக்கு தடை விதித்து மியன்மார் எடுத்துள்ள முடிவு, தனக்கு குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாக லீ கூறியுள்ளார். முன்னதாக அவர் பல முறை மியன்மாருக்கு பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. லீயின் பணி ஒருதலைப்பட்சமாக இருப்பதாலும், அவர்மீது நம்பிக்கை இல்லாததாலும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.