யாழ்ப்பாணம் புத்தூர் – மீசாலை வீதியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தபோது, பட்டத்திற்கு பொருத்தியிருந்த மின்சார வயர் வீதியால் சென்ற பிரதான மின்வடத்துடன் உரசுண்டதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றுமாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், புத்தூர் கிழக்கு பகுதியினை சேர்ந்த 19வயதான பாஸ்கரன் டர்சன் என்ற இளைஞனே பலியாகியுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் கூறியுள்ளனர். உயர்தரத்தில் கல்வி பயலும் இந்த இளைஞன் சக நண்பர்களுடன் இணைந்து பட்டம் ஏற்றியுள்ளார். இரவு நேரம் பட்டம் தொடர்ந்து நிற்பதற்காக, மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு அதற்கு மின்சார இணைப்பும் வழங்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. வீதியில் நின்று ஏற்றிய பட்டத்தினை வயல் தரவைக்குள் எடுத்துச்செல்ல முற்பட்டபோது பட்டத்தின் வாலில் பொருத்தியிருந்த வயர் வீதியால் சென்ற உயர் மின் அழுத்த பிரதான வடத்தில் உரசுண்டுள்ளது.

இதனையடுத்து, மின்சாரம் தாக்கிய நிலையில், தூக்கி வீசப்பட்ட குறித்த இளைஞனை சக நண்பர்கள் காப்பாற்றி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.