இலங்கை தொடர்பில் கனடா தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருக்கும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசாங்கத்தின் மீதும் சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கையிழந்தே காணப்படுகின்றனர் என்று கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் இடத்திற்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன். கடந்த முறை வந்தபோது இருந்த அதே நிலைமை தான் இன்றும் தொடர்கிறது. எவ்வித முன்னேற்றமும் இல்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் தொடர்ந்தும் நான் குரல் கொடுத்து வருகின்றேன். மேலும் இலங்கையின் பிரச்சினை தொடர்பில் கனடா தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.