மட்டக்களப்பு, ஏறாவூர் நகர சபை சிற்றூழியர்கள் இன்று காலை முதல் பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர் என்துடன், ஏறாவூர் நகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

சிற்றூழியர்கள் 68 பேருக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள கொடுப்பனவை வழங்கக்கோரி இப்போராட்டம் நடைபெறுகிறது. சிற்றூழியர்களது பணிப்பகிஷ்கரிப்பினால் குப்பை அகற்றும் பணி தொடக்கம் பல்வேறு பிரிவு நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இச்சிற்றூழியர்களுக்கு கடந்த வருடம் மார்ச் மாதம் தொடக்கம் ஒரு வருடகாலத்துக்குப் பணியாற்றுவற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளபோதிலும் கடந்த நவம்பர் மாதம்முதல் கொடுப்பனவு வழங்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வூழியர்கள், குப்பை அகற்றுதல், டெங்கு பரிசோதனை, வாசிகசாலை பராமரிப்பு, சோலை வரிஅறவீடு மற்றும் அலுவலக சுத்திகரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். கவனயிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வருகைதந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்எல். றெபுபாசம் இச்சிற்றூழியர்களது கோரிக்கை குறித்து கேட்டறிந்துள்ளார்.