யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் இரண்டு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக அரசியல் கட்சிகள் தனியாருக்கு சொந்தமான இடங்களில் போஸ்டர் ஒட்டியமை தொடர்பாகவும் கட்சியினது அல்லது வேட்பாளரது கட்டவுட்டுக்கள் வைத்தமை தொடர்பாகவுமே அதிக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இதுவரை ஒரு மோதல் சம்பவம் தொடர்பான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சில கட்சிகள் இத் தேர்தல் காலத்தில் வேலைவாய்புக்களை கொழும்பில் வைத்து வழங்குவதற்கு முயற்சித்து வருவது தொடர்பாக சில முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தேர்தல் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வீதிகளில் பொறிக்கப்படுகின்ற அரசியல் கட்சிகளது இலட்சணைகள் சின்னங்கள் அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்தாகவும் யாழ். மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.