இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நேபாளத்தின் இராணுவப் படையின் பிரதானி ஜெனரல் ராஜேந்த்ர ஷேத்ரிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இன்று முற்பகல், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவை, மேலும் பலப்படுத்தும் நோக்கிலேயே, ஜெனரல் ராஜேந்த்ர ஷேத்ரியின் இந்த விஜயம் அமைந்துள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில், இரு நாடுகளினதும் இராணுவத்தினரின் பங்களிப்பு, அனர்த்தங்களின் போதான படையினரின் பங்களிப்பு மற்றும் அவற்றுக்கான பயிற்சிகள் தொடர்பில், இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. விசேடமாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர், நேபாளம் எதிர்கொண்ட பூமியதிர்ச்சியின் போதான இலங்கை இராணுவத்தினர் உதவி குறித்து, ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஜெனரல் ராஜேந்த்ர ஷேத்ரி, உடனடியாகக் கிடைத்த அந்த உதவி பாராட்டுக்குரியதென்றும் தெரிவித்தார்.

அத்துடன், நேபாளத்துக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் மத மத, கலாசார மற்றும் சமூகத் தொடர்புகள் குறித்து எடுத்துரைத்த ஜனாதிபதி, தொடர்ந்தும் அவ்வாறான தொடர்புகளைப் பேண எதிர்ப்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இதன்போது, இருவருக்கிடையே நினைவுச் சின்னங்களும் கைமாறப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.