இலங்கையின் பிரபல பொப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் சென்னை திருவாண்மையூர் கந்தன்சாவடியில் நேற்றிரவு 7.20மணியளவில் காலமானார்.

ஏ.இ.மனோகரன் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர். இவர் பொப் இசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு இலங்கை மட்டுமன்றி தமிழகம் உள்ளிட்ட உலகில் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் இரசிகர்கள் உள்ளனர். இவர் பாடிய சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிட மாலுகெனாவா… என்ற பைலா பாடல் இலங்கை, இந்திய இரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. இப்பாடலை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களிலே நடித்தும் பாடியும் வந்துள்ளார். தமிழ், ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள மனோகர் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.