யாழ். மாவட்டத்தில் இதுவரை மீள்குடியேறிய மக்களில் 15 ஆயிரம் குடும்பங்கள் காணி அற்றவர்களாக பதிவாகி இருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

கடந்த 07 வருடங்களாக இவர்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்தார். மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன் உடுவில் பிரதேச செயலகத்தால் அமைக்கப்பட்ட 30 மாதிரிக் கிராம வீட்டுத்திட்டத்தை, மிகவும் பின்தங்கிய காணியற்ற நிலையிலுள்ள பயனாளிக்கு கையளிக்கும் நிகழ்வு யாழ் புன்னாலைக்கட்டுவான் கிழக்கு பிரதேசத்தில் நேற்று நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை கையளித்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த திரு கந்தையா மற்றும் இராசையா சரஸ்வதி ஆகியோரின் ஞாபகர்த்தமாக அவர்களின் குடும்பத்தினரால் அன்பளிப்பு செய்யப்பட்ட காணியில் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ் வீட்டுத்திட்டத்தில் ஒரு வீட்டுக்கு தலா ஒன்பது இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ் முரளிதரன் மற்றும் அரசாங்க அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.