தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ( புளொட் ) அமைப்பு, தமிழ் மக்கள் சார்ந்து முன்னெடுத்த சமூக மீள் எழுச்சித் திட்டங்கள் இன்று நேற்றல்ல, அமைப்பின் வரலாறு நெடுகிலும் நிறைந்து காணப்படுகின்றன.

இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமான பின்பு, யுத்தத்தினால் சிதைவடைந்து காணப்பட்ட, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களில், தமிழ் மக்களின் ஜனநாய உரிமைகளை பாதுகாக்கவும் இயல்பு வாழ்க்கைக்கான அடிப்படை தேவைகளை கட்டியெழுப்பவும் புளொட் அமைப்பு தனது வெகுஜன முன்னணியாகிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஊடாக தீவிரமாக செயற்பட்டிருந்தது.
வவுனியாவிலும், கிழக்கு மாகாணத்திலும் பல தோழர்களின் இன்னுயிரைப் பலியாக்கி மக்களுக்கு தற்காலிகமாக கிட்டைத்திருந்த சமாதானச் சூழலைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தது. தமிழர்களின் அரசியற் பிரதிநிதித்துவம் பேரினவாதக் கட்சிகளிடம் சென்று விடக்கூடாது என்பதற்காக, இன்றல்ல, இற்றைக்கு 23 வருடங்களுக்கு முன்பே, தேர்தலில் கிடைக்கக்கூடிய ஆசனங்களுக்காக இன்று முண்டியடித்துக் கொண்டிருக்கும் எராளமான தமிழ் அரசியல்வாதிகளின் ஏளனப் பேச்சுக்களையும் எதிர்ப்புகளையும் புறம்தள்ளி திட்டமிட்டு செயற்பட்டிருந்தோம்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகளின் பிரதான பகுதியாக காணப்படும் தமிழ்ச் சமூகத்தின் மீள் எழுச்சிச் செயற்பாடுகள் பற்றி 1993 வைகாசி மாதம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் புனர்வாழ்வுப் பிரிவு வெளியிட்ட ‘புனரமைப்பே எமது மூச்சு ‘எனும் கையேட்டில் வெளிவந்த விடயங்கள் தங்கள் அனைவரினதும் அவதானிப்புக்காக, மீண்டும் காலத்தின் தேவை கருதி பகுதி பகுதியாக…..