லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார். கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் ராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை, உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது. எவ்வாறாயினும் அந்த பணி நிறுத்தத்தை இரத்து செய்து அவரை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.