மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்காது அரசாங்கம் சர்வதிகாரப் போக்கில் புதிய அமைச்சு பதவிகளை வழங்கிமையை வன்மையாக கண்டிப்பதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இன்று (26) ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் பின்னர் மக்களின் ஆணைக்கமைய புதிய ஊழல் அற்ற அரசாங்கம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக ஊழல் நிறைந்த மக்கள் நிராகரித்த அரசியல்வாதிகளுக்கே மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுள்ளது.

ஜனாதிபதியின் தலைமையில் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினூடாக புதிய அரசாங்கம் உருவாகும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் ஊழல் நிறைந்த நல்லாட்சியை தொடர ஜனாதிபதி வழியமைத்துக் கொடுத்துள்ளமையானது மக்களின் தீர்ப்புக்கு எதிரானதாக கருதவேண்டியுள்ளது.

அதேபோல மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த அமைச்சு பதவி வழங்கப்படமையானது ஊழல் வாதிகளை காப்பாற்றவா என சந்தேகிக்கப்பட வேண்டியேற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவி வழங்கிய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியினால் அதனை ஏன் தடுத்து நிறுத்த முடியாமல் போனது? என ஊடகவியலாளர்களினால் கேள்வி தொடுத்த போது 19 திருத்தசட்டத்தினூடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பிரதமருக்கே சகல அதிகாரங்களும் வழங்கக்கட்டுள்ளது. இந்த அதிகாரங்களை கொண்டே சர்வதிகார முறையில் அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் வாரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு புதிதாக அமைச்சுப்பதவி வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அந்த அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள கூடாது என்பதுடன் ஊழல் மற்றும் திருடர்கள் அற்ற தனியான அரசாங்கத்தை அமைக்க ஐனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்