முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முருகன், நளினி, பேரறிவாளன் உட்பட 8 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ராஜிவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டோம் என்றும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வருத்தப்பட்டுள்ளேன் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ‘எமது தந்தையை கொலை செய்தவர்களை நானும் எனது சகோதரியும் முழுமையாக மன்னித்துவிட்டோம். நாங்கள் பல வருடங்களாக கவலையுடனும், கோபத்துடனும் இருந்தது உண்மையே, எனினும் தற்போது அவர்களை மன்னித்துவிட்டோம்’ என்று கூறியுள்ளார். ராகுல்காந்தியின் இந்த கூற்று அவரது மனித நேயத்தை காட்டுவதாகவும், இனிமேல் ராஜீவ் கொலையாளிகள் விடுதலையாவதில் சிக்கல் இருக்காது என்றும் கூறப்படுகிறது.